போதை ஊசி போடும் தகராறில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை: பிளக்ஸ் பேனரில் சுற்றி ஏரியில் சடலம் வீச்சு 2 நண்பர்கள் கைது: 3 பேருக்கு வலை

செய்யாறு: போதை ஊசி போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார். பின்னர் சடலத்தை பிளக்ஸ் பேனரில் சுற்றி ஏரியில் வீசியது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கண்ணியம் நகரை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மகன் சில்க் (எ) ஜெமினி (22). அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா மகன் அக்னி என்கிற சுனில் (19). நண்பர்களான இருவரும் போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

அடிக்கடி போதை ஊசி செலுத்திக்கொள்வார்களாம். கடந்த மாதம் 23ம்தேதி சுனில், ஜெமினி வீட்டுக்கு சென்று ‘போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம்’ என அழைத்துள்ளார். அதற்கு ஜெமினி மறுத்துவிட்டாராம். இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டார்களாம். இந்நிலையில் கடந்த 28ம்தேதி மாலை சுனில், அவரது நண்பர்களான புதுத்தெருவை சேர்ந்த கார்த்திக்(20), நாவல்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார்(23), திலீப்குமார்(27), பெங்களூரான் ஆகியோர் ஜெமினி வீட்டிற்கு சென்று போதை ஊசி போட வரும்படி அழைத்து சென்றார்களாம். 2 நாட்கள் ஆகியும் ஜெமினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சரவணன் செய்யாறு போலீசில் கடந்த 30ம்தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜெமினியின் நண்பர்கள் சுனில், கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் போதை ஊசி செலுத்திக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஜெமினியை, சுனில் உள்பட 5பேர் சேர்ந்து கத்தியால் சரமாரி குத்திக்கொன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: சுனில், கார்த்திக், அருண்குமார், திலீப்குமார், பெங்களூரான் ஆகியோர் போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம் எனக்கூறி ஜெமினியை அழைத்துக்கொண்டு கீழ்புதுப்பாக்கம்-புளியரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள நீரோடை கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளனர். இரவு 11மணியளவில் போதை ஊசி செலுத்திக்கொள்வது தொடர்பாக அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுனில், குமரேசன், கார்த்திக் ஆகியோர் ஜெமினியை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது சுனில் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெமினியின் கழுத்து உள்பட உடலில் பல்வேறு இடங்களில் சரமாரி குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெமினி உயிரிழந்தார். பின்னர் அவரது சடலத்தை பிளக்ஸ் பேனரில் சுற்றி புளியரம்பாக்கம் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரில் வீசியுள்ளனர். இதையடுத்து 5 பேரும் தப்பி சென்று விட்டனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து செய்யாறு போலீசார் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுனில் தெரிவித்த பகுதிக்கு சென்று வெட்டுக்காயங்களுடன் ஏரியில் அழுகிய நிலையில் கிடந்த ஜெமினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சுனிலின் நண்பரான பிரபுதாஸ் மகன் கார்த்திக்கையும் கைது செய்தனர். தலைமறைவான அருண்குமார், திலீப் குமார், பெங்களூரான் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

The post போதை ஊசி போடும் தகராறில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை: பிளக்ஸ் பேனரில் சுற்றி ஏரியில் சடலம் வீச்சு 2 நண்பர்கள் கைது: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: