திருவண்ணாமலை அருகே அரசு தொடக்க பள்ளியில் முட்டை கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் சரமாரி அடி: சத்துணவு சமையலர், உதவியாளர் கைது, அதிரடி சஸ்பெண்ட், ஆசிரியர் இடமாற்றம்

போளூர்: . திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொல்லைமேடு கிராமத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி சத்துணவு சமையலராக அதே ஊரை சேர்ந்த லட்சுமி (60), உதவியாளராக முனியம்மாள் (40), பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வரும் முட்டைகளை வேகவைத்து மாணவர்களுக்கு சரியாக வழங்காமல், முட்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு முட்டை தீர்ந்து விட்டது என்று பல நாட்களாக சொல்லி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி வழக்கம் போல் சமையலர், உதவியாளர் இருவரும் சில முட்டைகளை எடுத்து மறைத்து வைத்துவிட்டு சிலருக்கு மட்டும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் 5ம் வகுப்பு மாணவன் சமையலரிடம் சென்று முட்டை கேட்டுள்ளான். அவர்கள் முட்டை தீர்ந்து விட்டது என்று கூறியுள்ளனர். அந்த மாணவன் கண்டிப்பாக முட்டை வேண்டும், மறைத்து வைத்துக்கொண்டு இல்லை என்கிறீர்களா எனக்கூறி அடம் பிடித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த சமையலர் லட்சுமி மாணவனை துடைப்பத்தால் சரமாரி தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து சமையலர், உதவியாளர் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருப்பினும் இருவரையும் கைது செய்யக்கோரி ஊர் பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து சமையலர் லட்சுமி, உதவியாளர் முனியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளியின் ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* அமைச்சர் கண்டனம்
அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், ‘குழந்தைகளின் பசிப்பிணி போக்கிட காலை உணவுத்திட்டம் கொண்டு வந்த முதல்வரின் திராவிட மாடல் அரசு குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது’ என்று கூறப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை அருகே அரசு தொடக்க பள்ளியில் முட்டை கேட்ட மாணவனுக்கு துடைப்பத்தால் சரமாரி அடி: சத்துணவு சமையலர், உதவியாளர் கைது, அதிரடி சஸ்பெண்ட், ஆசிரியர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: