திருப்பூர்: பல்லடம் அருகே கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அண்ணனே தங்கையை அடித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து போலீசார் அண்ணனை கைது செய்தனர். பெற்றோரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (22). இவர் கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்தார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி (22) என்ற வாலிபரும் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வந்தார். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். வெண்மணி, வித்யாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்ததாகவும், அவருக்கு பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி வித்யாவின் பெற்றோர்கள் கோயிலுக்கு சென்ற நிலையில் திரும்பி வந்தபோது சரிந்து விழுந்த பீரோ அடியில் வித்யா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பீரோ தவறிவிழுந்து அவர் இறந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இதற்கிடையே, வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி, காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் சரவணனிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மருத்துவ குழுவினர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே உடற்கூறு ஆய்வை மேற்கொண்டனர். உடற்கூறு ஆய்வில் வித்யாவின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ச்சியாக வித்யாவின் தந்தை தாய் மற்றும் அவரது சகோதரன் சரவணன் (25) ஆகியோரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது சரவணன் தன் தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: வேறு சமூகத்தை சேர்ந்த வெண்மணி என்பரை, தங்கை வித்யா காதலித்து வந்தார். இதையடுத்து அவர் தன் பெற்றோருடன் என் அக்காவை பெண் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்தனர்.
ஆனால் இதற்கு நானும் என் பெற்றோரும் சம்மதிக்கவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று என் பெற்றோர் கோயிலுக்குச் சென்ற நிலையில் எனது தங்கையும் நானும் வீட்டிலிருந்தோம். அப்போது ஆத்திரத்தில் இருந்த நான் இரும்பு கம்பியால் தங்கை வித்யாவின் தலையில் தாக்கி கொன்றேன். இந்த ஆணவக் கொலையை மறைக்க, வீட்டிலிருந்த பீரோவை அவள் தலை மீது விழுந்தது போல் வைத்து விபத்து என நாடகமாடினேன். ஆனால் தங்கையின் காதலன் அளித்த புகாரின்பேரில் போலீசார் பிரேத பரிசோதனை நடத்தி என்னிடம் விசாரணை நடத்தியதில் இது கொலை என கண்டுபிடித்து விட்டனர்’, என அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் சரவணனை கைது செய்தனர். மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் வித்யா ஆணவ கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ச்சியாக போலீசார் வித்யாவின் தாய் மற்றும் தந்தையிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பல்லடம் அருகே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: அண்ணனே தங்கையை அடித்து கொன்றது அம்பலம் appeared first on Dinakaran.