நூறுநாள் வேலைத்திட்ட பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

ஆர்.கே.பேட்டை: நீலோத் பாலாபுரம் ஊராட்சியில் 100நாள் வேலை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி நேரில் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், நீலோத் பாலாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நேற்று பெண்கள் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, 100 நாள் வேலை திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதில், தங்களது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. 10 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். கழிவு கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே வேலை தருவதால் குடும்ப சூழ்நிலை மிகவும் பாதிப்படைகிறது. எனவே பணிகளை அதிக நாட்கள் வழங்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உறுதியளித்தார்.

The post நூறுநாள் வேலைத்திட்ட பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: