பழநி கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று இலகு கும்பாபிஷேகம்

பழநி, அக்.24: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுரம், நிழற்மண்டபங்கள் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள யாழி சிலையின் பின்புறப்பகுதி சேதமடைந்தது. மலைக்கோயிலில் குரங்குகள் அதிகமாக இருப்பதால் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டபோது யாழி சிலை உடைந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாமென கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக கடந்த வாரம் ராஜகோபுரத்தில் சாரம் கட்டப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து சேதமடைந்திருந்த 5 நிலை ராஜகோபுரத்தின் உச்சியில் வடக்கு பக்கம் உள்ள டகோரம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி ராஜகோபுரத்தின் சேதமடைந்த சிற்பங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. சீரமைப்புப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை, ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளன. இதற்காக புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் உள்ள கலசங்களை வைத்து நேற்று பாரவேல் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது.

The post பழநி கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று இலகு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: