வேலூர், ஜூலை 28: இலவச மின்சாரம் என்ற உரிமையை பறிக்கும் வகையில் உள்ள, விவசாய மின் மோட்டார்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் லீலா அலெக்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. டிஆர்ஓ சுரேஷ் முன்னிைல வகித்தார். இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘56 விவசாயிகள் உயிர்களை பலி கொடுத்து, போராடி பெற்ற விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்ற உரிமையை பறிக்கும் வகையில் மின்மோட்டார்களுக்கு 15 சதவீதம் அளவுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று மின்வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முயற்சியை கை விட வேண்டும்’ என்றனர்.
கே.வி.குப்பம் தாலுகா திருமணியை சேர்ந்த அனிஷ்குமார் என்பவர் அளித்த மனுவில், ‘வேலூர் மாவட்டத்தில் மத வழிபாட்டுத்தலங்களில் கட்டுப்பாடின்றி இரவு பகல் என்று பாராமல் விதிகளை மீறி கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை தடை செய்து ஒலிமாசு விதிகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அலமேலுமங்காபுரம் புதிய வீதி அருந்ததியர் காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு நாங்கள் வாழும் பகுதியில் வீட்டுமனை வழங்க வேண்டும்’ என்றனர். இதுபோல் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டும், வேளாண்மைத்துறை, காவல் துறை, மின்சாரத்துறை உட்பட பொதுநலன் குறித்த மனுக்கள் என்று 692 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இயக்கத்திறன் குறைபாடுடைய 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.950 வீதம் ரூ.1,900 மதிப்பிலான ஊன்றுகோல்கள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,79,700 மதிப்பில் செயற்கை கால்கள் என மொத்தம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,97,350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லீலா அலெக்ஸ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், கலால் உதவி ஆணையர் குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கலெக்டர் அங்கன்வாடிக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு
பனமடங்கி ஊராட்சி குழந்தைகள் கல்வி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு கொட்டாய்மேடு, மூலவலசை கிராம மக்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்காக அரசு புறம்போக்கு இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட முன்னாள் கலெக்டர் சுப்புலட்சுமி இடம் தேர்வு செய்து ஒதுக்கினார். ஆனால் அந்த இடத்தில் அரசியல் செல்வாக்குமிக்க ஒருவர் வீடு கட்டி வருகிறார். அந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றி அங்கன்வாடி மையத்தை கட்டித்தர வேண்டும்’ என்றனர்.
