வேலூரில் இரவு நேரத்தில் தொழிலதிபர் காரை வழிமடக்கி கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், ஜூலை 17: வேலூரில் இரவு நேரத்தில் தொழில் அதிபரின் காரை வழிமடக்கி மிரட்டல் விடுத்த மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் இயந்திரம் மற்றும் சிமெண்ட் ஹாலோபிளாக் செய்யும் மிஷின்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். இந்நிலையில் அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பெரும்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். தொழில் தொடங்குவது சம்பந்தமாக எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு என் மீது மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எங்களுக்குள் இருந்து வந்த தொழில் சம்பந்தமான பண விவகாரத்திற்கு தெளிவாக பேசி இருதரப்பினரும் முடித்துக் கொண்டோம். இந்நிலையில் திடீரென அவர் என்னை ஆள் வைத்து அடித்துக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் செய்து வருகிறார். மேலும் நான் பஞ்சமி நிலம் வாங்கி தருவதாக ரூ.1.50 கோடி பெற்று மோசடி செய்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு அப்துல்லாபுரம் சாலையில் நான் காரில் சென்று கொண்டிருந்தபோது 4க்கும் மேற்பட்ட நபர்கள் என்னை வழி மடக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஆகையால் ஆட்களை வைத்துத் தொடர் கொலை மிரட்டல் செய்தும், பொய் புகார் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: