வேலூர், ஜூலை 17: வேலூர் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள் என்று வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டு காரீப் பருவ பயிர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்யும்போது பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை வங்கிகளில் பெற்று கொள்ளலாம். நெல், துவரை, நிலக்கடலை, நெல்பயிருக்கு வருகின்ற 31ம் தேதியும், துவரை, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு ஆகஸ்டு 17ம் தேதியும் காப்பீடு செய்வதற்கு கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் தங்கள் அருகே உள்ள பொதுசேவை மையத்தை அணுகி காப்பீடு பிரீமியம் கட்டணமாக நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.764ம், துவரை ஏக்கருக்கு ரூ.374ம், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.644ம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரையோ, வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
