வேலூர், ஜூலை 24: வேலூர், திருவண்ணாமலை உட்பட அனைத்து வட்டாரங்களிலும் இயங்கும் 236 வெற்றிப்பள்ளிகளிலும், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களை நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், உயர்கல்வி வழிகாட்டலுக்கும் வெற்றிப்பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் தலா ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம், முதற்கட்டமாக 236 அரசுப் பள்ளிகள் வெற்றிப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
