ஓமலூர், ஜூலை 24: தீவட்டிப்பட்டி இரட்டைக்கொலை வழக்கில், கொலையாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க டிஐஜி தலைமையில் ஆலோசனை நடந்தது. காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட குண்டுக்கல் பஞ்சாயத்து, ராமப்பக்கொட்டாய் புளியமரத்து பேருந்து நிறுத்தம் அருகில் வசித்து வந்தவர் ஜெயராமன் (85), இவரது மனைவி அமராவதி (70). இவர்கள் கடந்த 20ம் தேதி இரவு, வீட்டில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அமராவதி அணிந்திருந்த ஒரு ஜோடி தங்கத்தோடு மற்றும் இரண்டு மூக்குத்திகளை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இக்கொடூர சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்தும், கொலையாளிகள் குறித்து இதுவரை எந்தவித ஆதாரமோ அல்லது சிறு தகவலோ போலீசாருக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
