சேலம், ஜூலை 17: சேலம் மாநகராட்சி 58வது வார்டில் சாக்கடை வசதி செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் முதல்வருக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 58வது வார்டில் பார்வதி நெ.2 நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 30 ஆண்டு காலமாக சாக்கடை மற்றும் சாலை வசதிகள், மின்கம்பம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. ரோட்டில் கழிவுநீர் செல்வதால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கின்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ளது. மாநகராட்சி குப்பை வாகனம் வருவதில்லை. கொசு மருந்து கூட அடிப்பதில்லை. இப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு உரிய முறையில் வரி கட்டி வருகிறோம். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதையடுத்து அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து சாக்கடை கால்வாய் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். அடுத்த நாளே பூமி பூஜை போடப்பட்டது. ரூ.14 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சாக்கடை கால்வாய் அமைக்காமல் பல மாதமாகியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தர நடவடிக்ைக எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
