ஓமலூர், ஜூலை 17: ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி கரையாவூர் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் காயத்ரி (22). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. 6 மாதத்திலேயே கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், காயத்ரி நேற்று மொபட்டில் சென்ற போது கீழே விழுந்து, பல் உடைந்து காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின், வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காயத்ரி, வீட்டின் முன்பு உள்ள கிணற்றில், பெற்றோர் கண்ணெதிரே குதித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குப்பன் மற்றும் குடும்பத்தினர், ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரமாக போராடி காயத்ரியை சடலமாக மீட்டனர். கிணற்றில் சேறு அதிகமாக இருந்ததால், அதில் சிக்கி காயத்ரி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
