சேலம், ஜூலை 21: சேலத்தில் ரூ.25 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் திறக்கப்பட்டு, 16 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்திலேயே சேலத்தில் தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, மதுரை உள்பட பல பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. சேலத்தில் செவ்வாய் பேட்டை, குகை, தாதகாப்பட்டி, பள்ளப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், ெகாண்டலாம்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, அரியாகவுண்டம்பட்டி உள்பட பல பகுதிகளில் வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இந்த பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியில் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இங்கு வெள்ளியில் கால்கொலுசு, அரைஞாண்கொடி, குங்குமசிமிழ், டம்ளர், கிண்ணம், காமாட்சி விளக்கு, குடம் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, டெல்லி, ஆக்ரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியை பொறுத்தமட்டில் 22 நிலைகளை கடந்தால் தான் வெள்ளிப்பொருளாக நமக்கு கிடைக்கிறது. வெள்ளிக்கட்டியாக பெறப்படும் வெள்ளி முதலில் உருக்கி கம்பியாக நீட்டப்படும். பின்னர் அளவுக்கு ஏற்ப கம்பி நீட்டி, குப்பமெஷின், பூ அடித்தல், திருகு ஆணி அடித்தல், டிசைன் போடுதல், அரும்பு அடித்தல், மெருகு போடுதல் உள்பட 22 நிலைகளுக்கு தனித்தனியே பட்டறைகள் உள்ளன. ஒவ்வொரு பட்டறைக்கும் வெள்ளியை கொண்டு செல்லும்போது போக்குவரத்து செலவு, காலவிரயம் உள்பட பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் அனைத்து பட்டறைகளும் ஒரே இடத்தில் கொண்டு வரவேண்டும் என்று வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் அரசுக்கு பல ஆண்டாக கோரிக்கை வைத்தனர்.
இதை அரசு பரிசீலித்தது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சேலத்தில் நடந்த விழாவில் ரூ.24.55 கோடியில் வெள்ளி உற்பத்தி மைய பன்மாடி கட்டிடம் கட்டப்படும் என அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இரும்பாலை ரோட்டில் அரியாகவுண்டம்பட்டியில் 1.2 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்தது. அங்கு 400 முதல் 690 சதுரடியில் பரப்பளவில் 102 கடைகள் கட்டப்பட்டது. இந்த வளாகத்தை கடந்தாண்டு மார்ச்சில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இருப்பினும் இதுவரை எந்த கடையும் உற்பத்தியாளர்களுக்கு ஒதுக்கப்படாததால் வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் கட்டிடத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் இந்த மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சேலம் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்க தலைவர் ஆனந்தராஜன், அமைச்சர் மதன்ராஜாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சேலம் வெள்ளி கொலு உற்பத்தியாளர்களுக்கு சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தில் கட்டப்பட்டுள்ள வளாகங்களை 50 சதவீதம் மானியத்தில் அல்லது ஐந்தாண்டுகளுக்கு வட்டியில்லா கடன் தவணை முறையில் கட்டுவதற்கு உதவ வேண்டும். வெள்ளி கொலுசுக்கு புவிசார் குறியீடு பெற்று தர அரசு முன்வர வேண்டும். வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் திறப்பு விழா கண்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது. விலை அதிகமாக இருப்பதால் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் வாங்க முடியாத விலையில் உள்ளனர். எனவே இதன் விலையை குறைக்க வேண்டும். உற்பத்தி மையத்தில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். இதற்கு சிட்கோ நிறுவனம் எந்தவிதமான முன் முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
50 சதவீத மானியம் தராத ஒன்றிய அரசு
‘‘சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் கட்ட வேண்டும் என்பது எங்களது நீண்டநாள் கோரிக்கை. இதை பரிசீலித்த அப்போதைய அரசு அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் 1.2 ஏக்கரில் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம் கட்டியது. ஆனால் 16 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இங்கு கடை அமைக்க ஒரு சதுரடிக்கு ரூ.4,200 என்ற அடிப்படையில் ஒவ்வொரு கடைக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால் அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வராததால் கடைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு, வளாகம் செயல்படாமல் உள்ளது’’ என்பது வெள்ளி பொருட்கள் உற்பத்தியாளர்களின் குமுறல்.
