சேலம், ஜூலை 18: சேலம் மாவட்டத்தில் 1,695 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கினார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் லட்சுமணன், சிவக்குமார், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு 1,695 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் முகவரி.
அதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு பயன்களை பெறலாம். விண்ணப்பித்த அனைவருக்கும், ஒவ்வொரு வாரமும் இதேபோல நிகழ்ச்சி நடத்தி புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயானிகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில் காலாவதியானதாக தகவல் பரவியது. ஆனால், அச்சடித்தலில் ஏற்பட்ட குளறுபடி தான் என சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனம் விளக்கம் அளித்தது. கூட்டத்தில், டிஆர்ஓ ரவிக்குமார், துணை மேயர் சாரதாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷாலினி, கவுன்சிலர் கிரிஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
