இடைப்பாடி, ஜூலை 17: இடைப்பாடி அருகே ஆடையூர் பகுதியை சேர்ந்த நாராயணன் மகள் சௌந்தர்யா(22). இவர் சித்தூர் மேல்காட்டை சேர்ந்த ஈஸ்வரன் மகன் வேல்முருகன் என்பவரை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 மற்றும் ஒரு வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வாழை தோப்புக்கு மருந்து அடித்த விவகாரத்தில் வேல்முருகன் மற்றும் அவரது பெற்றோர்கள் சௌந்தர்யாவை திட்டியுள்ளனர்.
இதனால், அவர் கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 12ம் தேதி, மாமனார் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், மனைவியை சமாதானம் செய்து, வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில், 14ம் தேதி சௌந்தர்யா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக, அவரது தந்தைக்கு வேல்முருகன் போன் மூலம் தெரிவித்துள்ளார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சௌந்தர்யா, சிகிச்சை பலனில்லாமல் 16ம் தேதி உயிரிழந்தார். தனது மகள் சாவுக்கு வேல்முருகன், மாமனார் ஈஸ்வரன், மாமியார் சித்ரா தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சௌந்தர்யாவின் தாய் சரஸ்வதி, பூலாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பூலாம்பட்டி எஸ்ஐ பரமசிவம் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். திருமணமாகி 6 வருடமே ஆவதால், சங்ககிரி ஆர்டிஓவும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
