உடுமலை, ஜூலை 20: உடுமலை நகராட்சி 25, 26வது வார்டுக்கு உட்பட்ட கருணாநிதி காலனியில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பொதுமக்கள் வசதிக்காக பல லட்சம் ரூபாய் செலவில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், பயன்படுத்தப்படாத கழிவறைக்கு ரூ.4 லட்சம் பராமரிப்பு தொகையாக நகராட்சி நிதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும், இதேபகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, 150 மீட்டர் நீளத்துக்கு குழாய் அமைத்து, பைப் பொருத்தப்பட்டது. சின்டெக்ஸ் டேங்கும் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதே இல்லை. வெறும்காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, உடனடியாக மூடிக்கிடக்கும் கழிவறையை திறக்க வேண்டும், ஆழ்துளை கிணற்று நீரை விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
