கோவை,ஜூலை13:பழைய இரும்பு கடையில் புகுந்து செம்பு கம்பிகளை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். கோவை குனியமுத்தூர் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் குனியமுத்தூர் கே.ஜி.கே ரோட்டில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூன் 29ம் தேதி இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 60 கிலோ எடையுள்ள செம்பு கம்பிகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் பேலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிப் (25), உக்கடம் புல்லுகாடு பகுதியைச் சேர்ந்த முகமது யாசர் என்ற அப்பு (24), கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த ஜாபர் அலி (31) மற்றும் பர்னபாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆசிப், அப்பு, ஜாபர் அலி ஆகிய 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து சுமார் 14.750 கிலோ எடையுள்ள செம்பு கம்பி மற்றும் ரூ.5,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பர்னபாஸை போலீசார் தேடி வருகின்றனர்.
