காரமடை, ஜூலை 3: காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சி செயலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் ஊராட்சி செயலர்கள் சிலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேறு ஊராட்சிகளுக்கு இடமாற்றம் செய்ய கோவை கலெக்டர் பவன்குமார் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுபாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஊராட்சி செயலர்களில் வெள்ளியங்காடு ஊராட்சியில் பணிபுரிந்து வந்த மாலதி நெல்லித்துறைக்கும், நெல்லித்துறையில் பணிபுரிந்து வந்த சத்யபிரியா வெள்ளியங்காடுக்கும், ஜடையம்பாளையம் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த நந்தினி இரும்பறை ஊராட்சிக்கும், இரும்பறையில் பணிபுரிந்து வந்த சபரீஸ்வரன் ஜடையம்பாளையத்திற்கும், சிக்கதாசம்பாளையத்தில் பணிபுரிந்து வந்த மோகன்குமார் சின்ன கள்ளிப்பட்டிக்கும், சின்ன கள்ளிப்பட்டியில் பணிபுரிந்து வந்த செந்தில்குமார் கெம்மாராம்பாளையத்திற்கும், கெம்மாராம்பாளையத்தில் பணிபுரிந்து வந்த மகாலட்சுமி சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இப்பணி மாறுதல் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பணி மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்லக்கூடாது. மீறி விடுப்பில் செல்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும் என கலெக்டர் பவன்குமார் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
