கோவை, ஜூலை 10: காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் வழக்கில் மாஜி போலீஸ்காரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை பற்றிய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (53). இவர், காங்கிரஸ் கட்சி ஓபிசி பிரிவு தலைவராக இருந்து வருகிறார். கடந்த 5ம் தேதி காலை தனசேகர் தனது வீட்டின் அருகே காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கும்பல் அவரை கடத்தி பாலக்காடு பைபாஸ் சாலை நோக்கிச் சென்றது. மேலும், அவரை காரில் வைத்து சரமாரியாக தாக்கி ரூ.2 கோடி கேட்டுள்ளனர். பின், அந்த கும்பல், தனசேகரிடம் இருந்த மொபைல் போன், வீட்டுச் சாவி மற்றும் கார் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு, பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு காரில் தப்பி சென்றனர்.
