வால்பாறை, ஜூலை 8: வால்பாறையில் லேசான சாரல் மழையும், இடையிடையே வெயிலும் நிலவி வருவதால் தேயிலை செடிகளில் புதிய தளிர்கள் அதிகளவில் வளர்ந்து, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள், இரண்டு இலை ஒரு மொட்டு என்ற தரநிலைப்படி பசுந்தேயிலையை பறித்து, தரம் பிரித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். சாரல் மழையால் பறிக்கப்பட்ட பசுந்தேயிலை இலைகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், தொழிற்சாலைகளில் அவற்றை உலர்த்த கூடுதல் நேரமும் எரிசக்தியும் செலவாகிறது.
இதனால் தேயிலை உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதாக தொழிற்சாலை நிர்வாகங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில், தரமான பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால் தேயிலைத்தூள் (Made Tea) உற்பத்தியும் உயர்ந்துள்ளது. சந்தையில் தேயிலைத் தூளுக்கான தேவை தொடர்வதால், தேயிலை தொழிற்சாலைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
