கோவை, ஜூலை 6: கோவை மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாள் தேர்வை 321 பேர் எழுதவில்லை. டெட் 1ம் தாள் தேர்வுபோல் 2ம் தாள் தேர்வும் சற்று கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு 2 நாள் நடந்தது. இதில், இரண்டாம் நாளான நேற்று டெட் 2ம் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 23 மையங்களில் 6,501 பேர் எழுத இருந்தனர். இவர்களில் நேற்று 2ம் தாள் தேர்வை 6,180 பேர் எழுதினர். 321 பேர் எழுதவில்ைல. இந்த தேர்வுக்காக அதிகாலை முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களில் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வு மையங்களுக்குள் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், தேர்வர்கள் பெல்ட், ஷூ, ைஹ ஹீல்ஸ் அணிந்து தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. டெட் 1ம் தாள் தேர்வு கடினமாக இருந்ததாக பெரும்பாலான ஆசிரியர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த 2ம் தாள் தேர்விலும் கணிதம், சமூக அறிவியல் பகுதிகளில் இடம்பெற்ற கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதில், சமூக அறிவியல் பாடத்தேர்வில் ஆண்டுகள் தொடர்பான வரலாற்று கேள்விகள் அதிகமாக இருந்ததாகவும், சில கேள்விகளின் அளவு மிக நீளமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இதன் காரணமாக கேள்வியை புரிந்துகொண்டு பதில் அளிக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது எனவும், பதில் அளிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர். கணித பாடத்தில் சில கேள்விகள் எதிர்பார்த்ததைவிட சவாலாக இருந்ததாகவும், மொழிப்பாடங்கள், கல்வியியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
