மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு அருகே குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு

 

கோவை, ஜூலை 3: கோவையில் குடிநீர் தொட்டிகளுக்கு இடையே குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி 21வது வார்டுக்குட்பட்ட கணபதி மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் வசதிக்காக அங்கு 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் 20 வார்டுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

இந்த பகுதியில் குப்பைகள் கொண்டு வரப்பட்டால் கடுமையான துர்நாற்றம், ஈ, கொசு, எலி மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீரின் தரம் மாசடையும். சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை கைவிட்டு மக்கள் வசிக்கும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை அமைக்க வேண்டும். எனவே இரண்டு குடிநீர் தொட்டிகளுக்கு அருகே அமைக்கப்பட உள்ள இந்த திட்டத்தை நிரந்தரமாக கைவிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: