குட்கா விற்பனை ஏஜென்டுகளை பிடிக்க வலியுறுத்தல்

 

கோவை, ஜூலை 1: கோவை நகர், புறநகரில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் விற்பனை உச்சத்தில் இருக்கிறது. நகரில் குறிப்பிட்ட சில வணிக பகுதிகளில் குடோன்களில் மூட்டை மூட்டையாக பான்பராக், குட்கா பொருட்களை பதுக்கி வைப்பதும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடைகளுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. தினமும் நகர், புறநகரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பான் பொருட்கள் பொருட்கள் விற்பனையாகி வருகிறது. ஏரியாவிற்கு ஏற்ப சிலர் குடோன்களை அமைத்து அங்கேயிருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் பொருட்களை இரு மடங்கு விலைக்கு விற்றாலும் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள். ஏரியா வாரியாக போதை பாக்கு விற்கும் கடைகள் விவரங்கள், வியாபாரிகள் குறித்த தகவல்கள் போலீசாருக்கு தெரியும். போலீசார் தினமும் கடைக்காரர்கள் மீது ஒரிரு வழக்கு பதிவு செய்து அப்படியே விட்டு விடுகிறார்கள்.

3க்கும் மேற்பட்ட முறை அபராதம் விதிக்கப்பட்டும் தொடர்ந்து போதை பாக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது ‘புகையிலை சட்ட பிரிவில்’ கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் முன் வருவதில்லை. மேலும் போதை பாக்கு சப்ளை செய்யும் டீலர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை. சில கடைகளில் போதை பாக்கு விற்பனை பிரதானமாக நடக்கிறது. போதை பாக்கு வியாபாரம் ெதாடர்பாக வீடியோ பதிவு ஆதாரங்களுடன் புகார் சென்ற போதும் நகர், புறநகர் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. நகர், புறநகரில் 250க்கும் மேற்பட்டவர்கள் போதை பாக்குகளை வெளி மாநிலத்தில் இருந்து கோவைக்கு கடத்தி வருகின்றனர். தினமும் பல டன் போதை பாக்குகள் சப்ளையாகிறது. கடத்தும் ஏஜன்டுகளை தப்ப விட்டு சில்லரை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைமை இருப்பதால், போதை வஸ்து விற்பனையை தடுக்க முடிவதில்லை. போலீசார் இந்த விவகாரத்தில் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: