கோவை, ஜூன் 30: கோவை சிங்காநல்லூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காந்தன் (44). இவருடைய மனைவி வெற்றிச்செல்வி (38). இவர், நேற்று முன்தினம் காலை தனது கணவரிடம், உப்பிலிபாளையத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். மதியம் ஆகியும் வெற்றிச்செல்வி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த காந்தன், அவரைப் பல இடங்களில் தேடியுள்ளார். தொடர்ந்து உப்பிலிபாளையம் முருகன் கோயிலுக்கு சென்று பார்த்தார்.
அப்போது, அங்கு மனைவியின் இருசக்கர வாகனம் மட்டும் சைடு லாக் செய்யப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், வெற்றிச்செல்வி அங்கு இல்லை. உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேடியும் அவர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காந்தன் இரவு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வெற்றிச்செல்வியை தேடி வருகிறார்.
