மேலூரில் கனமழையால் உடைந்து விழுந்த மின் கம்பங்கள்: இரவு முழுதும் பொதுமக்கள் தவிப்பு

 

மேலூர்: மேலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, மரம் வேரோடு சாய்ந்து 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது., இந்த மழை காரணமாக மேலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன. அதேபோல் மேலூர் அருகே பெருமாள்பட்டி பகுதியில் சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்து அருகில் சென்று கொண்டிருந்த மின்கம்பிகள் மீது விழுந்தது.

இதனால் அப்பகுதியில் இருந்த 3 மின் கம்பங்கள் உடைந்ததுடன், மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால், மின் கம்பிகள் செல்லும் பாதையினை மின்சாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, பொதுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: