கும்பகோணம்: பலத்த மழையின் காரணமாக கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஒரு லட்சம் நெல்மூட்டைகள் நனைந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் டன் அளவுக்கு சேமிக்ககூடிய இந்த திறந்தவெளி கிடங்கில் தற்போது 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த இருப்பில் இருந்த சுமார் ஒரு லட்சம் மேலான நெல் மூட்டைகள் வீணாகி உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்படாமல் பல மாதங்களாக தேக்கி வைத்துள்ளதால் தார்ப்பாய்கள் கிழிந்து கிடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தின் பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்தது. சில மூட்டைகளில் நெல் முளைத்தும், நெல்மணிகள் கருகியும் வருகிறது. தார்ப்பாய் பற்றாக்குறையால் பெரும்பாலான நெல் மூட்டைகள் மூடி வைக்கப்படாமல் உள்ளதால், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், சாக்குகள் கிழிந்து நெல்மணிகள் கீழே கொட்டியும், மூட்டைகளிலே நெல் முளைத்தும், கருகியும் வீணாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் சுமார் 11 செ.மீ., அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் மேலும் நெல் மூட்டைகள் வீணாகி உள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக தஞ்சாவூர் நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கும்பகோணம் துணை மண்டல மேலாளர் மெய்கண்டமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து உடனடியாக நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தவும், தேங்கியுள்ள தண்ணீரை ஜேசிபி கொண்டு வடிய வைக்கவும், தார்ப்பாய்கள் கொண்டு நெல் மூட்டைகளை மூடி வைக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
