உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன் மகன் நிஷாந்த் (22). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு சேலம் ரோடு ரவுண்டானா அருகில் சொந்த வேலையாக சென்றபோது அந்தப் பகுதியில் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நிஷாந்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிஷாந்த் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நிஷாந்துக்கு சிகிச்சை அளிக்கும் நிலையில், அங்கு திரண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் தவெக கட்சியை சேர்ந்த சிலர் சம்பவம் குறித்து விவரம் கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் ‘சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில் ரீல்ஸ் எடுக்க வேண்டுமா…?’ எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றினர். அப்போது போலீசாரிடம் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகியை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி உ.கீரனூர் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் திரண்டதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.
