களக்காடு தேங்காய் உருளி சிற்றருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்: பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

 

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு சிவபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தலையணைக்கு வடக்கு பகுதியில் தேங்காய் உருளி சிற்றருவி உள்ளது. இந்த அருவிக்கு களக்காடு பச்சையாறு அணை வழியாக செல்ல வேண்டும். நீர்வளத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிற்றருவிக்கு உள்ளூர்வாசிகள் சென்று வந்தனர். களக்காட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள தேங்காய் உருளி சிற்றருவிக்கு செல்லும் ரோடு, குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அதிலும் பச்சையாறு அணையில் இருந்து 3 கி.மீ. தூரம் மண் சாலை தான் உள்ளது. அதுவும் சேறும், சகதியுமாக உள்ளது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் தேங்காய் உருளி சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் தேங்காய் உருளி சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வெளியூர் சுற்றுலா பயணிகளும் படை எடுத்த வண்ணம் உள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளியூர்களில் இருந்து கார், பைக்குகளில் வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். பனிக்கட்டியை உருக்கி விட்டது போல் ஜில் என்ற குளிர்ச்சியுடன் கொட்டும் தண்ணீரில் தலை நனைத்ததும் உடம்பிற்கும், உள்ளத்திற்கும் தனி தெம்பு பிறப்பதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

தேங்காய் உருளி சிற்றருவி வனத்துறை எல்கைக்கு அப்பால் உள்ளதால் இங்கு வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் கிடையாது. நுழைவு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர். பெண்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. அருவி பகுதியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை. போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவில்லை. நீர்வளத்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. இதனை பயன்படுத்தி மது பிரியர்கள் பொது இடத்தில் வெட்ட வெளியில் மது அருந்துவது சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. அருவி பகுதியில் மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பதாகவும், சில நேரங்களில் அருகில் உள்ள விளைநிலங்களிலும் வீசி அட்டகாசம் செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் மதுபிரியர்கள் போதையில், ஜட்டியுடன் அருவியில் ஆட்டம் போடுவதுடன் பெண்கள் அருகிலும் சென்று அருவறுக்க செயலில் ஈடுபடுவதால், குடும்பத்தினர்களுடன் செல்லும் பெண்கள் குளிக்க முடியாமல் திரும்பும் நிலை நிலவுவதாகவும் கூறுகின்றனர். எனவே மது பிரியர்களை கட்டுப்படுத்த அருவி பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சையாறு அணை நுழைவு வாயிலை கடந்து தான் அருவிக்கு செல்ல முடியும். அங்கு கேட்டும் உள்ளது. அதில் நீர்வளத்துறையினர் சோதனை நடத்தி மது அருந்தியவர்களையும், மது பாட்டில்களுடன் வருபவர்களையும் அருவிக்கு செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர் திருட்டு
இதற்கிடையே அருவிக்கு ஏராளமான கார், பைக்குகள் வருவதால் பேட்டரி, பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டும் அதிகரித்து வருகிறதாம். மது, மாது பிரியர்களின் அட்டகாசத்தால் அருவியில் மோதல் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் நிலவுவதால் தேங்காய் உருளி சிற்றருவி பகுதியில் போலீசாரும், நீர்வளத்துறையினரும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டு மொத்த சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

புதர்களுக்குள் மறையும் ஜோடிகள்
தேங்காய் உருளி சிற்றருவியில் போலீஸ், வனத்துறை பாதுகாப்பு இல்லாததால் சிலர் இளம்பெண்களை அழைத்து வருவதாகவும், அவர்கள் புதர்களுக்குள் நீண்டநேரம் பதுங்குவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். கல்லூரி, பள்ளி மாணவிகளும் ஆண் நண்பர்களுடன் வருவதாகவும், சில நேரங்களில் 3 இளைஞர்கள் ஒரு பெண்ணை மட்டும் அழைத்து கொண்டு புதர்களுக்குள் மறைவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: