ரூ.200.71 கோடியில் நடந்து வரும் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் எப்போது முடியும்?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

ஈரோடு: ஈரோட்டில் ரூ.200.71 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பெரும்பள்ளம் ஓடை சீரமைக்கும் பணிகள் எப்போது நிறைவு பெறும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரோடு மாநகரில் பழமையான மழைநீர் வடிகாலாக பெரும்பள்ளம் ஓடை இருந்து வருகிறது. இந்த ஓடை ஈரோடு மாநகரின் குறுக்காக 12 கி.மீ வரை ஓடுகிறது. இந்த ஓடையில் கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும், மழைநீரும் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. பெரும்பள்ளம் ஓடை முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்புகளின் கழிவுநீரும், குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டு ஆங்காங்கே சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டு வந்தது.

இதனால், மழைநீர் வடிகாலாக இருந்த பெரும்பள்ளம் ஓடை சாக்கடை கால்வாயாக மாறி மாநகரின் அழகை கெடுத்து வந்தது. இந்நிலையில், பெரும்பள்ளம் ஓடையை சீரமைத்து மேம்படுத்தவும், நவீனப்படுத்திட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஈரோடு மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.200.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து திண்டல் அடுத்த கதிரம்பட்டி காரப்பாறையில் இருந்து காவிரி ஆறு வரை பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்கும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
இப்பணிகளுக்காக முதற்கட்டமாக பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது.

பின்னர், ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் இருபுறமும் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஓடையில் 327 எண்ணிக்கையில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும், ஓடையின் பாதுகாப்பு கருதி 8.05 கி.மீ தூரத்திற்கு கம்பி வலை தடுப்புகளும், 25 இடங்களில் நீர் சரிவு அமைப்புகளும், ஓடையின் பக்கவாட்டு பகுதிகளில் 4 இடங்களில் பூங்காக்களும், 2.4 கி.மீ நீளத்தில் இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஓடையின் இருபுறங்களிலும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளை இணைக்கும் வகையில் செங்கோடம்பள்ளம், 80 அடி சாலை, காரைவாய்க்கால் உட்பட 4 இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

6 பகுதிகளாக நடந்த சீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகளில், 5 பகுதிகளில் முழுமையாக சமீபத்தில் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள ஒரு பகுதிகளில் பணிகள் முழுமை பெறவில்லை. அதே சமயத்தில் ஓடை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பள்ளம் ஓடை மற்றும் அதன் கரைப்பகுதிகளில் 320 குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. அவர்களுக்கு நல்லகவுண்டம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கியும் யாரும் அங்கு குடிபெயராமல் காலதாமதம் ஏற்படுத்தினர். நீதிமன்ற வழக்கும் இருந்தது.

பணிகள் துவங்கியபோது கொரோனா காலக்கட்டம், அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், 2 இடைத்தேர்தல் போன்றவைகள் காரணமாக பணிகளை விரைவாக மேற்கொள்ள இயலவில்லை. தற்போது நீதிமன்ற வழக்கு நிறைவடைந்ததையடுத்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: