மேலூர்: மேலூர் அரசு பள்ளியில் இன்று நடந்த பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சினிமா பாடலுக்கு தவெக பெண் நிர்வாகியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் குத்தாட்டம் போட்டது மாணவர்கள், பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. மதுரை மாவட்டம் மேலூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி நடந்தது. மேலூர் இருபாலர் பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த மராத்தான் போட்டியில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டி துவக்க விழாவிற்காக பள்ளி வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியை துவக்கி வைக்க மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.
மராத்தான் போட்டிக்கு வந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் மேடையில் சினிமா பாடல்கள் ஒலி பரப்பப்பட்டன. அப்போது, முதல்வர் விஜய் நடித்த சச்சின் என்ற திரைப்படத்தில் இருந்து வாடி வாடி கைப்படாத சிடி என்ற சினிமா பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு மேடையில் இருந்த தவெக நிர்வாகிகள் நடனம் ஆடினர். குத்தாட்டம் போட்ட தவெக நகர செயலாளர் சுபாஷினி, அமைச்சர்களையும் ஆட வரும்படி அழைத்தார். இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பெண் நிர்வாகியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார். இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.
பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சினிமா பாடல் ஒலி பரப்பு செய்யப்பட்டதும், அதற்கு அமைச்சரே குத்தாட்டம் போட்டதும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், துவக்க விழாவிற்காக பள்ளி வளாகத்திலேயே தவெக கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனர்கள் சாய்ந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளி வளாகத்திற்குள் கட்சி பேனர்களை வைத்து புது கலாச்சாரத்தை தவெகவினர் புகுத்தி வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
