ஆத்தூர், ஜூன் 19: தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமானதால், ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்தார்.
அப்போது, கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்ததையடுத்து, அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதில் அவருக்கு உடல்நிலை பாதித்ததால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் நந்தினி தலைமையிலான குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக ஆத்தூர் அரசு மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், தலைவாசல் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, சட்டவிரோத கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த மதுபாலா, புவனேஸ்வரி, கௌரி, நாராயணன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், முறையற்ற கருக்கலைப்பில் ஈடுபட்ட, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நாராயணன்(46) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
