சேலம், ஜூன் 11: அரசுப்பதவிகள் குறித்து ஊக்கமளிக்கும் வகையில் நடந்த களப்பயணத்தில், சேலம் மாவட்ட கலெக்டருடன் பள்ளி மாணவர்கள் சந்தித்து பேசினர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த கோரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 வகுப்பு பயிலும் 30 மாணவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அரசுப்பதவிகள் குறித்து ஊக்கமளிக்கும் வகையில் நடந்த இப்பயணத்தின் தொடக்கமாக, கலெக்டர் இளம்பகவத்தை மாணவர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது, சேலம் மாவட்ட பெருமைகள் குறித்து பேசிய கலெக்டர், நன்றாக படித்து அரசின் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என, மாணவர்களை வாழ்த்தினார். பின்னர், அங்குள்ள மாவட்ட வழங்கல் அலுவலகம், நிலஅளவை அலுவலகம், மருத்துவப்பணிகள் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் போன்றவற்றுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள அதிகாரிகள், பதவி, அலுவலக செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
