சேலம், ஜூன் 15: சேலம் அடுத்த கருமந்துறையில், மலைக் கிராமங்களுக்கு இடையேயான பஸ் வசதி நீட்டிப்பை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை தலக்கரை பகுதியில், மழைக்கிராமங்களுக்கு புறநகர் பஸ் வழித்தட நீட்டிப்பு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.
இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த புறநகர் பஸ் வழித்தட நீட்டிப்பு மூலம், ஆத்தூரிலிருந்து தும்பல், கருமந்துறை வழியாக சூலாங்குறிச்சி வரை இயக்கப்படும் நடையினை, சூலாங்குறிச்சியிலிருந்து வழித்தடம் நீட்டித்து தலக்கரை, பாச்சாடு கிராமங்களுக்கு காலை 7.35 மணிக்கும், மாலை 5.40 மணிக்கும் பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன், ஆர்டிஓ தமிழ்மணி, பொது மேலாளர்கள் (சேலம்) மோகன்குமார், (தொழில்நுட்பம்) கலைவாணன், துணை மேலாளர் (கூட்டாண்மை வணிகம்) அருள்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
