பேராசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

சேலம், ஜூன் 11: தமிழகத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பல்கலைக்கழக ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா, முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு உயர்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பணப்பலன்கள், கல்லூரி ஆசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இந்த பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தகுதியான ஆசிரியர்கள், தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் போன்ற நிரந்தரப் பதவிகள் இல்லாததால், கல்லூரி ஆசிரியர்களுக்கு வழக்கமான பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இல்லை. இதனால், பணி மேம்பாட்டு திட்டம் தான், அவர்களுக்கான ஒரே வாய்ப்பாகும். ஆனால், உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு அதன் பலன்கள் தொடர்ந்து மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும், பணி மேம்பாட்டு திட்ட பணப் பலன்களை, ஒரே சீராக அனுமதித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து முன்மொழிவுகளையும் விரைவாகச் செயலாக்கி தீர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: