ஓமலூர், ஜூன் 19: சேலம் மாவட்டம், உப்பாரப்பட்டி மானத்தாள் கிராமத்தில், சுமார் 200 ஆண்டுகள் பழமையான அய்யனாரப்பன் கருப்புசாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலை மூடுவதற்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அம்மாசி, செல்வம் உள்ளிட்ட 9 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் மறுஆய்வு மனு மற்றும் இடைக்கால தடை கோரும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கோயிலை மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய விஸ்வநாதன், மணிமாறன் உள்ளிட்ட 5 பேரை, நீதிமன்றமே தானாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளது. அவர்கள் இதுகுறித்து பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதுவரை, முந்தைய உத்தரவுகளின்படி அனைத்து தரப்பினரும் அமைதியை பேண வேண்டும் என்றும், விதிகளை மீறினால் தொளசம்பட்டி இன்ஸ்பெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியும் அம்மாசி, செல்வம் தரப்பினர் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
