டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை

சேலம், ஜூன் 9: சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த 6ம் தேதி இரவு, வழக்கம் போல் விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு 1.05 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள், பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கடையின் மேற்கூரை மற்றும் கடை முன்பு வீசி விட்டு தப்பியோடினர். இந்த தீ விபத்தில் காலி அட்டை பெட்டிகளும், கடையில் உள்ளே மதுபாட்டிலுடன் கூடிய அட்டை பெட்டிகளும் எரிந்து நாசமானது. தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

டாஸ்மாக் கடைக்கு அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர்கள் 2 பேர், பைக்கில் வந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, பைக் எண்ணை கண்டறிந்து, மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்களிடமும், டாஸ்மாக் பணியாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: