நெல்லை: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே வெள்ளாளன்குளம் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெயகண்ணன் (23), மாரியப்பன் (21) ஆகிய இருவரும் டவுன் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் அபிசேகப்பட்டியில் செயல்படும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிடச் சென்றனர். அங்கு வெள்ளாளன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பு வாலிபர்கள் சிலரும் வந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு வெள்ளாளன்குளம் ஊருக்குள் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது எதிர் தரப்பைச் சேர்ந்த 6 வாலிபர்கள் மற்றும் அருகில் உள்ள காங்கேயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் என மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து ஜெயகண்ணன், மாரியப்பன் ஆகிய இருவரையும் அரிவாளால் தலையில் வெட்டினர். இதை பார்த்த அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர். அப்போது அங்கு வந்த இன்னொரு ஜெயக்கண்ணன் (19), பெருமாள் மனோ (18), கிருஷ்ணபெருமாள் (20), லெட்சுமி (47) ஆகியோரையும் அரிவாளால் தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து சீதபற்பநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாள் வெட்டில் காயமடைந்த பெண் உள்பட 6 பேர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 8 பேர் கொண்ட கும்பலை நள்ளிரவு முதல் தீவிரமாக தேடி வந்தனர். மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் இரவு முழுவதும் வெள்ளாளன்குளம் கிராமத்தில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேசி கலைந்து போகச் செய்தார்.
தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று காலை தாக்குதலில் ஈடுபட்டதாக பாண்டி என்ற இசக்கி பாண்டி (31), ராமர் என்ற ராம ஐயப்பன் (22), பாக்கிய நாகராஜன் (28), சுரேஷ் என்ற சுடலை (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். நேற்று மாலையில் கொக்கி குமார் என்ற முத்துக்குமார் (29), சுரேஷ் (22), முருகன் என்ற பெரிய முருகன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வெள்ளாளன்குளம் கிராமத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள பூலம் மேலத்தெருவை சேர்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் (25). கூலி தொழிலாளி. நேற்றிரவு தனது வீட்டருகேயுள்ள ரேஷன் கடை முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்து நான்கு பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் திடீரென மணிகண்டனை அரிவாளால் வெட்ட முயற்சித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலின் பிடியிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு பைக்குகளில் தப்பிச் சென்றது. இதில் அவரது இடது கால் துண்டானது. இதுகுறித்து போலீசார் 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் தலைதூக்கும் வன்முறை
நாங்குநேரி, பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 9 பேரை ஒரு கும்பல் சராமாரியாக அரிவாளால் வெட்டியதில் 2 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மீண்டும் கடந்த மே மாதம் 28ம் தேதி அம்பை, அதற்கு மறுநாள் 29ம் தேதி ஆலங்குளம், நெட்டூர், அதைத்தொடர்ந்து நெல்லை, மானூர், தெற்குபட்டியில் ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கியது. இந்த சம்பவங்களில் 10 பேர் காயமடைந்தனர். 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பேரை எஸ்பி பிரசன்னகுமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி தூத்துக்குடி, தாளமுத்துநகரில் கஞ்சா வழக்கில் போலீசிடம் காட்டிக் கொடுத்தாக ஒரு கும்பல் 5 பேரை அரிவாளால் வெட்டி வன்முறை வெறியாட்டம் ஆடியது. தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் பொதுவாக இருதரப்பினருக்கு இடையே அல்லது இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும். போலீசாரும் துரிதமாக செயல்பட்டு சம்பந்தபட்டவர்களை கைது செய்து பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுவர். முன்பெல்லாம், தலைவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மட்டும்தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக்கருதி போலீசார் உஷார்படுத்தப்படுவார்கள். ஆனால் தற்போது தென்மாவட்டங்களில் நிலைமை மாறி வருகிறது. சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் கும்பலாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் பயங்கர ஆயுதங்களால் தாக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த தொடர் வன்முறை சம்பவங்கள் தென்மாவட்டங்களில் மோசமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கி உள்ளது.
