திருவெறும்பூர்: திருச்சியில் நள்ளிரவில் பைக்கில் சென்ற ரவுடியை மற்றொரு பைக்கில் 3 பேர் கும்பல் விரட்டி சென்று வெட்டி கொலை செய்தனர். திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த மகபூ பாஷா மகன் பாதுஷா (24). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெருவழியாக பாதுஷா பைக்கில் சென்றார். அப்போது அவரை ஒரு பைக்கில் 3 பேர் கும்பல் பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். இதை பார்த்த பாதுஷா, பைக்கை வேகமாக ஓட்டி சென்றார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த பாதுஷா பைக்கை போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த 3 பேர் கும்பல், ஓட ஓட விரட்டி அரிவாள்களால் பாதுஷா தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பாதுஷா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பாதுஷா ஓட்டி வந்த பைக்கையும் அந்த 3 பேர் கும்பல் திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக திருவெறும்பூர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். திருச்சி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பைக்கில் விரட்டி சென்று வந்த 3 பேர் கும்பல், பாதுஷாவை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், கொலையான ரவுடி பாதுஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் பைக்கில் தப்பி சென்ற 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரவுடி பாஷா மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமிராவில் பதிவான நெஞ்சை பதறவைக்கும் கொலை காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெண்ணுடன் தொடர்பால் கொலை?
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரியமங்கலத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் பாதுஷா ெதாடர்பில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பான முன்விரோத தகராறில் கடந்த செப்டம்பர் மாதம் பாதுஷாவை மர்ம நபர்கள் கொல்ல திட்டமிட்டு அரிவாளால் வெட்டியதில் பாதுஷாவின் வலது கையில் 2 விரல்கள் துண்டாகி இருந்ததும், ஆனால் பாதுஷா தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. பெண்ணுடன் தொடர்பால் ஏற்கனவே கொலை செய்ய திட்டமிட்ட நபர்கள் தான், பாதுஷாவை கொலை செய்தனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
