நாகப்பட்டினம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தவெக நிர்வாகிக்கு மக்கள் தர்மஅடி: மரத்தில் கட்டிவைத்து போலீசில் ஒப்படைப்பு

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (65). இவர், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது முகத்தில் வெள்ளை துணி கட்டிய மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கஸ்தூரி அணிந்திருந்த 5பவுன் தங்க நகையை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்டு அவர் சத்தம் போடவே அறையில் இருந்த மருமகள் சரண்யா வெளியே வந்ததும், மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, அந்த மர்ம நபரை துரத்தி சென்றனர். அருகில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த பகுதிக்குள் ஓடிய அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். தகவலின்படி கீழ்வேளூர் போலீசார் வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், கீழ்வேளூர் அருகே இருக்கை மேலத்தெருவை சேர்ந்த சேகர் மகன் பாரதி (26) என்பதும், அவர் அதே பகுதி தவெக கிளை பொறுப்பாளர் எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பாரதியை கைது செய்தனர். மக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Stories: