திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்(23). இவர் திண்டிவனம் அடுத்த தீவனூரில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் காரில் வந்த 5 பேர் கும்பல், சலூன் கடைக்குள் புகுந்து தினேஷை சரமாரியாக கத்தியால் வெட்டுவிட்டு தப்பியது.
அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிந்து தினேசுக்கு வேறு யாரிடமாவது முன்விரோதம் இருந்ததா?, வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள காரின் எண்ணை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சலூன் கடையில் புகுந்து வாலிபர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
