சிவகங்கை பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது பயங்கரம்: தவெக நிர்வாகி வெட்டிக்கொலை

சிவகங்கை: சிவகங்கை டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த தவெக கிளைச் செயலாளரை, மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார் (25). பொன்னாம்பட்டி தவெக கிளைச் செயலாளராக உள்ளார். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் எதிரே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையுடன் பாரும் உள்ளது. இந்த பாரில் நேற்று மாலை நவீன்குமார் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் பாருக்குள் நுழைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் நவீன்குமாரை சரமாரியாக வெட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடல் முழுவதும் வெட்டுப்பட்ட நவீன்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்தவர்கள் பாரில் இருந்து அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசன் போலீசார், நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடைபெற்ற பாரில் சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். நவீன்குமார் பொன்னாம்பட்டி தவெக கிளைச் செயலாளராக உள்ளதால், உட்கட்சி பிரச்னை காரணமாக கொலை நடந்ததா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப்பதிந்து தப்பி சென்ற 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவகங்கை டி.புதூரை சேர்ந்த மதன்ராஜ்(26), சிவகங்கை போஸ் ரோட்டை சேர்ந்த சரவணக்குமார்(31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் கை, கால் துண்டித்த நிலையில் அழுகிய ஆண் சடலம்
ஊட்டி தும்மனட்டி அருகே குந்தசப்பை பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் தொழிலாளர்கள் தேயிலைப் பறிக்க சென்றனர். அப்போது துர்நாற்றம் வீசி உள்ளது. வனவிலங்குகள் ஏதேனும் இறந்து கிடந்து இருக்கலாம் என்று எண்ணி தேடி பார்த்துள்ளனர். அப்போது தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் இரு கைகள் மற்றும் முழங்கால் வரை இரு கால்களும் இல்லாத நிலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது.

இறந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்த கிடந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா வனவிலங்கு தாக்கி இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேபாள நாட்டை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மணிலாமா (35) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளார். இறந்தவரின் ஒரு சில அடையாளங்கள் காணாமல் போனவருடன் ஒத்துப் போகிறது. இருந்தாலும் பிரேத பரிசோதனை முடிவில் தான் இறந்தவர் யார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

சேலம் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சேலம் கோரிமேட்டில் பெண்கள் அரசு கலைக்கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படும் இடத்தில், பல ஆண்டாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக சீனிவாசன், விற்பனையாளர்களாக ராஜசேகர், வீரராஜா பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், வழக்கம் போல் விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நள்ளிரவு 1.20 மணியளவில் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கடையின் மேற்கூரை மற்றும் கடை முன் வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் கடை முன் இருந்த காலி அட்டை பெட்டிகள் கொளுந்து விட்டு எரிந்தது.

அதிலிருந்து எழும்பிய நெருப்பு கடையின் உள்பகுதியிலும் பரவியது. அவ்வழியாக சென்றவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்குள் வரவில்லை. இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், விரைந்து சென்று, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் காலி அட்டை பெட்டிகளும், கடையில் உள்ளே மதுபாட்டிலுடன் கூடிய அட்டை பெட்டிகளும் எரிந்து நாசமானது. ஆனால் மதுபாட்டிகள் எதுவும் சேதமடையவில்லை. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: