சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் முகாம்

ஈரோடு, ஜூன் 4: ஈரோடு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் கடன் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் பதிவு செய்யப்பட்ட சுமார் 11 ஆயிரத்து 800 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக, சிப் பொருத்திய கியூ ஆர் கோடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமம் வரும் 30ம் தேதி வரை, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. மேலும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு கடன் வழங்கவும் இந்த சிறப்பு முகாமின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும், சாலையோர வியாபாரிகள் கடன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 31 வங்கிகள் முன் வந்துள்ளது. எனவே, இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, சாலையோர வியாபாரிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: