பவானி, மே 23: அம்மாபேட்டை அருகே மூணாஞ்சாவடியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே அரசு பள்ளி, கோயில் உள்ளது. இந்த மதுக்கடையில் மது அருந்திய குடிமகன்கள், சாலையோரம் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பாலியல் தொந்தரவும் தந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதுக்கடையால் சுற்று வட்டார பகுதியில் குடும்ப அமைதி பாதிக்கப்படுவதோடு நாள்தோறும் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதனால் டாஸ்மாக் கடையை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் சுமார் 30க்கு மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடை முன்பு கடையை அகற்ற வேண்டும் என முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன், ஆர்ஐ சௌந்தர்ராஜன் மற்றும் அம்மாபேட்டை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
