ஈரோடு, மே 26: விஜயபுரி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் கள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்த மேகலா தலைமையில் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை தாலுகா விஜயபுரி கிராமத்தில் டாஸ்மாக் கடை (எண்-3935) இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில் முதலமைச்சர் உத்தரவின்படி விஜயமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது. இதன் காரணமாக விஜயபுரி டாஸ்மாக் கடையில் நாளுக்கு நாள் குடிமகன்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டு, மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த கடையின் 400 மீட்டர் இடைவெளியில் அங்கன்வாடி மையம், மாரியம்மன் கோயில், பஸ் ஸ்டாப், ரேஷன் கடை அனைத்தும் உள்ளன. எனவே, விஜயபுரி டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
