கோவையில் இருந்து கர்நாடகா புறப்பட்டபோது திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

 

சத்தியமங்கலம், மே 25: திம்பம் மலைப்பாதை 7வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலை பாதை அமைந்துள்ளது.  இந்த மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவையிலிருந்து வங்கி லாக்கர்கள் பாரம் ஏற்றிய லாரி, கர்நாடக மாநிலம் மாண்டியா செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.

லாரியை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காக்காவாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (46) ஓட்டினார். திம்பம் மலைப்பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. லாரி கவிழ்ந்ததால் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: