ராயக்கோட்டை, மே 22: தேன்கனிக்கோட்டையிலிருந்து கெலமங்கலம் வழியாக, கிருஷ்ணகிரிக்கு தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தர்மபுரி மாவட்டம், நமாண்டஅள்ளி அருகே உள்ள கூத்தாண்டஅள்ளியை சேர்ந்த டிரைவர் தர் ஓட்டி சென்றார். உள்ளுக்குறுக்கை அரசு பள்ளி அருகே வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பாத்திர வியாபாரியான ராயக்கோட்டை பாஞ்சாலிநகரைச் சேர்ந்த வீராசாமியின் மனைவி ராணி(62) சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ்சில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்கள் நாகமங்கலம், ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்தவரின் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விபத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்சை பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தினால் உள்ளுக்குறுக்கை- கெலமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
