ஓசூர், மே 22: ஓசூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, 6 பவுன் நகை மற்றும் உண்டியலை உடைத்து ரூ.20 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அட்டகுறிக்கி கிராமத்தை சேர்ந்தவர் ரவி(43). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, நர்சரி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் ரவி வீட்டிற்கு வந்த போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 2 பீரோக்களை உடைத்து கம்மல், மோதிரம், நெக்லஸ் என 6 பவுன் நகைகள் மற்றும் 3 உண்டியல்களில் சேர்த்து வைத்திருந்த சுமார் ரூ.20,000 பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் நகைகள் மற்றும் உண்டியலில் பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
