ஓசூர், மே 12: தமிழகத்திலேயே அதிகளவில் மா விளையும் மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள், உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதே போல், மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால், ஓசூரில் செந்தூரா, மல்கோவா போன்ற மாம்பழங்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற ரக மாம்பழங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஓசூர் நகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதில் சில மாம்பழங்கள் நன்கு கலராக உள்ளதாகவும், ஆனால் சுவை இல்லை எனவும் இது போன்ற பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
