பாப்பாரப்பட்டி, மே 15: பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்ல காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மனோஜ்குமார்(16). 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாபுரத்து பள்ளம் பகுதியில், தனது தாயாரை புளியம்பழம் அடிக்கும் வேலைக்காக கொண்டு சென்று விட்டுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த டூவீலர் மோதியதில், மனோஜ்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மனோஜ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
