வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை ஜெட் விமானங்கள் உட்பட மொத்தம் 42 போர் விமானங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை போருக்கு ஆகி இருக்கும் செலவு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
ஈரானை இலக்காகக் கொண்டு ஆபரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) என்று பெயரிடப்பட்ட அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. சுமார் 40 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலின் போது போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உட்பட குறைந்தது 42 அமெரிக்க விமானங்கள் இழக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி இருக்கும் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரானுடனான போரில் அமெரிக்கா இழந்த மற்றும் சேதமடைந்த விமானங்களி நான்கு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) போர் விமானங்கள், ஒரு F-35A லைட்னிங் 2 (Lightning 2) போர் விமானம், ஒரு A-10 தண்டர்போல்ட் II (Thunderbolt II) தரைத்தாக்குதல் விமானம், ஏழு KC-135 ஸ்ட்ராடோடேங்கர் (Stratotanker) வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு E-3 சென்ட்ரி AWACS விமானம், இரண்டு MC-130J கமாண்டோ II (Commando II) சிறப்புப் பணி விமானங்கள், ஒரு HH-60W ஜாலி கிரீன் II (Jolly Green II) ஹெலிகாப்டர், 24 MQ-9 ரீப்பர் (Reaper) ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒரு MQ-4C டிரைட்டன் (Triton) ஆளில்லா விமானம் ஆகியவை அடங்கும்.
2026 மே 13 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை (CRS) அறிக்கையின்படி, இந்த இழப்புகள் போர் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்கள், தவறுதலாக சொந்தப்படை மீதே நடத்தப்பட்ட தாக்குதல்கள் (Friendly Fire) மற்றும் விபத்துகளால் ஏற்பட்டுள்ளன. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற, பிரதிநிதிகள் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் துணைக் குழு விசாரணையின் போது, பென்டகனின் பொறுப்பு நிதித் கட்டுப்பாட்டாளர் ஜூலஸ் டபிள்யூ. ஹர்ஸ்ட் III, ஈரான் மீது மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான துறையின் செலவு மதிப்பீடு 29 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக கூறினார்.
